3085 ஏக்கர் நிலத்தின் பத்திரப்பதிவு தடையை நீக்கி ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்த்த தவெக அரசு: இந்து அறநிலையத்துறை ஆணையில் அம்பலம்

சென்னை: பத்திரப்பதிவு தடை செய்யப்பட்ட 3085 ஏக்கர் நிலத்தின் தடையை நீக்கம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை கோயில்களுக்குச் சொந்தமான இடங்களை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்தவர்களிடம் இருந்து மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதில் வரி கூட கட்டாமலும், வாடகை கட்டாமலும் வீடு, விவசாய நிலங்கள், வணிக வளாகங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். பலர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பட்டாவும் வாங்கியுள்ளனர்.

இதனால் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டன. குறிப்பாக 8107 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நிலங்கள், கட்டிடங்களின் மதிப்பு மட்டும் ரூ.8436 கோடியாகும். இந்த இடங்கள் அனைத்தும் 1055 கோயில்களுக்குச் சொந்தமானவை. இந்தநிலையில், தற்போது ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3085 ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களுக்கே வழங்கி தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடார்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள ஆணையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு மைனர் இனாம் (ஒழிப்பும் மற்றும் இரயத்துவாரியாக மாற்றலும்) சட்டம் (30/1963) முன்பு திருக்கோயில் பெயரில் தாக்கலாகி பின்னர் இரயத்துவாரி பட்டாக்கள் தனிநபர்கள் பெயரில் வழங்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களால் சார்பதிவாளர்களுக்கு முகவரியிட்ட கடிதத்தின் அடிப்படையில் தடையாணையில் பதிவு செய்யப்பட்டு பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டது தொடர்பாக கீழ்காணும் நிலங்களை தடை நீக்கம் செய்ய கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புகழிமலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலின் 3 கிராமங்களில் அமைந்துள்ள 214.29 ஏக்கர் நிலத்தில், 719 பட்டாதாரர்கள்; கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோயிலின் 4 கிராமங்களில் அமைந்துள்ள 204.52 ஏக்கர் நிலத்தில், 637 பட்டாதாரர்கள்; குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் சுவாமி கோயிலின் 1 கிராமத்தில் அமைந்துள்ள 132.49 ஏக்கர் நிலத்தில், 334 பட்டாதாரர்கள்; வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோயிலின் 7 கிராமங்களில் அமைந்துள்ள 2533.65 ஏக்கர் நிலத்தில், 1700 பட்டாதாரர்கள் என மொத்தமாக 4 கோயில்களின் 7 கிராமங்களில் உள்ள 3084.95 ஏக்கர் பரப்பளவில் 3390 பட்டாதாரர்கள் உள்ளனர்.

மேற்படி நிலங்களுக்கு தடை நீக்கம் செய்யலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என இணை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி நிலங்கள் தொடர்பாக வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் தடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட கோயில் செயல் அலுவலர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: