ராயக்கோட்டை, ஜூலை 10: ராயக்கோட்டை வனத்தையொட்டி, வயலெட் மற்றும் மஞ்சள் நிற சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தோட்டங்களில் பூக்கள் பூத்து குலுங்குவது ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் ராயக்கோட்டை, தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகள் கர்நாடக எல்லை வனத்தையொட்டி அமைந்துள்ளது. குறிப்பாக ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பூக்கள் சாகுபடி அதிக ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு செண்டுமல்லி, பட்டன்ரோஸ், மல்பெரி மற்றும் சாமந்தி பூக்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறிகளை பயிரிடுவதை காட்டிலும், பூக்கள் சாகுபடியில் தான் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மண் அதிக ஈரப்பதம் கொண்டுள்ளது. இதன் காரணமாக பூக்கள் அதிகளவில் விளைச்சல் செய்யப்படுகிறது.
