வாஷிங்டன்: எச் 1பி மாணவர் விசா மற்றும் கிரீன் கார்டு செயல்முறைகளை மேலும் கடுமையாக்கக்கூடிய விதிகளை தயாரிப்பதற்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகின்றது. வெளிநாட்டு தொழில்வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் அமெரிக்க குடிவரவு அமைப்பில் செயல்படுவதை மேலும் கடினமாக்கக்கூடிய புதிய குடிவரவு விதிகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் தயாரித்து வருகின்றது.
முன்மொழியப்பட்ட இந்த மாற்றங்கள் அமெரிக்காவில் படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் இந்தியர்கள் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான சில வழிகளை உள்ளடக்கியுள்ளன. எச்1 பி திட்டம், எல் -1 விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்தியர்கள் அதிக தடைகளை எதிர்கொள்ளக்கூடும். இந்த முன்மொழிவு பல்கலைக்கழகங்கள் மற்றும் சில ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு கிடைக்கும் எச்1-பி உச்சவரம்பில் இருந்து விலக்குகளை குறைக்கக்கூடும்.
சில பெரிய நிறுவனங்களுக்கு பொருந்தும் தற்போதைய கூடுதல் கட்டணத்தை விரிவுபடுத்தவும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது. எச்-1பி விசாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகளுக்காக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கான செலவை அதிகரிக்கக்கூடிய மாற்றங்களையும் தொழிலாளர் துறை திட்டமிட்டு வருகின்றது.
* கையொப்பமிடுவதில் புதிய விதிமுறை
எச் 1பி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன்கார்டு விண்ணப்பங்கள் உள்ளிட்ட குடிவரவுப் பலன் கோரிக்கைகளில் விண்ணப்பதாரர்கள் கையொப்பமிடும் முறை குறித்த புதிய விதிகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் இன்று (ஜூலை 10) அமல்படுத்துகின்றது.
இந்த புதுப்பிக்கப்பட்ட கொள்கையானது கையால் எழுதப்பட்ட அல்லது முறையாக நகலெடுக்கப்பட்ட கையொப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை தெளிவுபடுத்துகின்றது. நகலெடுத்து ஒட்டப்பட் , தானாக உருவாக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத கையொப்பங்களை கொண்ட எந்தவொரு விண்ணப்பமும் ஆரம்ப பட்ட மதிப்பாய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டு இருந்தாலும் நிராகரிக்கப்படும் அல்லது மறுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
