சென்னை: பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் தமிழகத்தில் திருடப்பட்ட 12ம் நூற்றாண்டை சேர்ந்த 3 சிலைகள் ஆஸ்திரேலியா அரசு இந்திய அரசிடம் ஒப்படைக்கிறது. தமிழகத்தில் தொன்மையான கோயில்களில் இருந்து பல நூறு கோடி மதிப்புள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு சர்வதேச சிலை கடத்தல் கும்பல்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பழங்கால சிலைகள் ஏலம் விடும் நிறுவனங்கள் குறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து, தமிழக கோயில்களின் சிலைகளாக இருந்தால் அவற்றை இந்திய அரசு வெளிநாடுகளில் போட்டுள்ள பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தமிழக சிலைகளை மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ரூ.2 கோடி மதிப்புள்ள மங்களகரமான காளி சிலை, திருவாரூர் மாவட்டம் கடுவங்குடி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள கற்களால் ஆன நந்தி சிலை, ரூ.2 கோடி மதிப்புள்ள ஆறு தலை கொண்ட கார்த்திகேய கற்சிலை ஆஸ்திரேலியா கான்பேரா பகுதியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் இருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பின்னர் இந்திய வெளியுறவுத்துறை உதவியுடன் ஆஸ்திரேலியா நாட்டிற்கு 3 சிலைகளுக்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, தமிழகத்தில் திருடப்பட்ட சிலைகள் என உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அரசும் 3 சிலைகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்து இருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் ஆஸ்திரேலியா தேசிய கலைக்கூடத்தில் உள்ள 3 சிலைகளும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதைதொடர்ந்து 3 சிலைகளும் விரைவில் தமிழகம் கொண்டுவரப்பட உள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
