சென்னை: ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றிக் கொள்ளலாம், ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் நேரடியாக சென்று மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு முதல், புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரை புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் சுமார் 98.47% நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் திரும்பப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புழக்கத்தில் எஞ்சி இருக்கும் சுமார் ₹5,451 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகளையும் பொதுமக்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் நினைவூட்டியுள்ளது. முன்னதாக, இந்த நோட்டுகளைப் படிப்படியாகத் திரும்பப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பொதுமக்களுக்கான இந்த எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வு அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்ககூடிய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் நேரடியாக சென்று மாற்றிக் கொள்ளலாம். ரூ.2,000 நோட்டை தபால் மூலமாக அனுப்பினால் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ரூ.2,000 நோட்டு தற்போதும் செல்லத்தக்க ஒன்று என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது
