சென்னை: தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியிலும் கடந்த ஓராண்டாகவே பால் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், தனியார் பால் நிறுவனங்கள், பால் வணிகத்தை தக்கவைத்துக்கொள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருகின்றன. இவ்வாறு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதால் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் இழப்பைச் சரிகட்ட, நுகர்வோருக்கான பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் தற்போது முடிவு செய்துள்ளன.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ₹2 உயர்த்தியிருந்தன. இந்நிலையில்,இத்தகைய கூடுதல் செலவினங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க, நடப்பு ஆண்டில் 2வது முறையாக மீண்டும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தும் இறுதி முடிவிற்கு தனியார் பால் நிறுவனங்கள் வந்துள்ளன.
அதன்படி, இந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா பால் நிறுவனம் நாளை ஜூலை 9ஆம் தேதி முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால், 500 மில்லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.29-ல் இருந்து ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.39-ல் இருந்து ரூ.41 ஆகவும் விலை உயர்கிறது. இதேபோல்,1000மில்லி (1 லிட்டர்) சமன்படுத்தப்பட்ட பால் ரூ.54-ல் இருந்து ரூ.57 ஆகவும்,நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.66-ல் இருந்து ரூ.69 ஆகவும்,கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.73-ல் இருந்து ரூ.76 ஆகவும்,500 கிராம் ஹட்சன் தயிர் ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும்,ஆரோக்யா தயிர் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் விலை அதிகரிக்கிறது.
