டெல்லி: டெல்லியில் உள்ள முக்கிய மற்றும் உயர் பாதுகாப்பு பகுதிகளில் புறாக்களின் எச்சங்கள் சிசிடிவி (CCTV) கேமராக்களின் லென்ஸை மறைத்து காட்சிகளை தெளிவற்றதாக்குவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் சிசிடிவி கேமராக்களை சுற்றி முட்கள் போன்ற தடுப்புகளான Anti-Bird Spikes பொருத்தும் பணியை டெல்லி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் இந்தத் திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது VIP பாதுகாப்பு மற்றும் குற்ற விசாரணைகளுக்கான கண்காணிப்பு தடையின்றி நடைபெற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய காவல்துறயினர் இந்த ஸ்பைக்குகள் (Spikes) பறவைகளுக்கு எவ்வித காயத்தையும் ஏற்படுத்தாமல், அவை கேமராக்களின் மீது அமர்வதை மட்டும் தடுத்து தடையற்ற கண்காணிப்புக்கு உதவும் என குறிப்பிட்டனர்.
நகரில் இருக்கும் முக்கியமான விஐபி பகுதிகள் மற்றும் குற்றப் புலனாய்வு கண்காணிப்புப் பணிகளுக்கு எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினர். டெல்லி நகர் முழுவதும் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள சிசிடிவி நெட்வொர்க், குற்றவாளிகளைக் கண்டறியும் முக அங்கீகார தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் தெளிவான வீடியோ தரம் மிகவும் அவசியமாகிறது என்று குறிப்பிட்டு உள்ளனர்.
