புதுக்கோட்டை, ஜூலை 8: புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி பகுதிகளில், நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் நீர்நிலைகளில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்ட பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) செல்வம் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். உயர்நீதிமன்றம் நீர்நிலைகளில் வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல் மரங்களை அகற்றி நீர்நிலைகளை பாதுகாத்திட உத்தரவிட்டுள்ளது. மேலும் இப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் உறுதிபடுத்திட அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நகராட்சி நிர்வாகத்துறை கட்டுபாட்டில் உள்ள நீர்நிலைகளில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்ட பணிகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) செல்வம், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை மாநகராட்சிக்கு சொந்தமான மேல 3வது தெருவில் உள்ள மேல நைனாரி குளத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளதையும், நைனாரி குளத்திற்கு நீர் வரத்து வாய்க்கால் அடைக்கப்பட்டுள்ளதை அகற்றவும், நீர்வரத்து வருவதை உறுதி செய்யவும், தூய்மை பணிகள் நடைபெற்று வருவதையும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள காட்டுப் புதூர் குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்றுதல் ஆகியவற்றை மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு).செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
