தஞ்சாவூர், ஜூலை 8: பாபநாசம் தாலுகாவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய பிஎம்எஸ் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் பாரதிய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலர் நாகராஜன் கூறியதாவது; தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் தற்போது கோடை குறுவை நெல் கொள்முதல் தீவிரமாக நடைபெறுகிறது. இதில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் இயக்கம் இன்றி கடந்த 20 நாள்களாக நேரடி கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் நெல் கொள்முதல் பணியாளர்கள் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்ய அச்சத்தோடு உள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் நெல் கொள்முதல் பணி பாதிக்கும்.
தஞ்சாவூர் மண்டலத்தில் செயல்படும் அனைத்து கிடங்குகள் மற்றும் சேமிப்பு நிலையங்களில் நெல் வைப்பதற்கான இடவசதி இருந்தும் அந்த இடங்களில் நெல் மூட்டைகளை இறக்கி பாதுகாக்க வேண்டிய முதுநிலை மண்டல மேலாளர் நெல்லை இயக்கம் செய்யாமல் நெல் கொள்முதல் பணியாளர்களுக்கு இயற்கை இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. அண்மையில் பட்டீசுவரம் திறந்தவெளி சேமிப்பு மையத்தில் திடீரென பெய்த மழையால் நெல் மூட்டைகள் சேதமானதற்கு ஆய்வு செய்யாததே காரணம். எனவே ஆட்சியர் நேரடி கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
