சென்னை: சென்னை கிண்டியில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்திய பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: அரசின் அமைச்சரவையில் சேர்ந்த உடனே தவெக கூட்டணியில் சேர்ந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. ஆட்சி அமைக்க 2 இடங்கள் தேவை என முதல்வர் விஜய்யிடம் இருந்து கடிதம் வந்தது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தார்கள், அதேபோல தான் விசிகவும் வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம்.
ஆதரவு அளித்த 10 நாட்களுக்கு பிறகுதான் அமைச்சரவையில் இடம் பெறும் முடிவை எடுத்தோம். பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின் போது திமுக கூட்டணியில் இருப்பதாக உணர்கிறோம், அமைச்சரவையில் இடம்பெற்றாலும் தவெக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து விட்டோம் என்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என தெரிவித்திருந்தேன். கடந்த 1ம் தேதி கூட்டணி அமைக்க தான் முதல்வர் ஆலோசனை நடத்தினார், அதில் பங்கேற்றோம். ஆனால் அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையவில்லை என்று தான் பொருள்.
அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற உடனே நாங்கள் திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டோம் என பலர் தெரிவித்தனர். எடுக்கும் முடிவை கூட்டணி தலைமை என்ற முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். அந்த உறவு தொடர்கிறது, நட்பு தொடர்கிறது, அவருடைய கவனத்திற்கு சென்று கருத்துகளை பகிர்ந்து கொண்டு ஆதரவு வழங்குகிறோம் என தெரிவித்த பிறகுதான் திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று அப்போது சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார்.
* வார்த்தைகளில் விளையாட வேண்டாம்: மாணிக்கம் தாகூர்
இரட்டைமலை சீனிவாசனின் 167வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தவெக தோழமை கட்சி கூட்டத்தில் தவெக தலைமையில் கூட்டணி அமையவில்லை என திருமாவளவன் பேசியுள்ளார்.
காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தோழமை நிலையில் இருக்கிறோம். பல ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை நடைபெற்றது. எனவே குழப்பம் வேண்டாம். அமைச்சரவையில் இடம்பெற்றாலே அதில் நீங்களும் ஒரு அங்கம் தான். எனவே வார்த்தை விளையாட்டு வேண்டாம். லெப்ட் டர்ன் எடுத்த பின்பு ரைட் டர்ன் பற்றி பேசுவது வெட்டி வேலை. நாம் வண்டி ஏறிவிட்டோம். நமது பாதை தெளிவாக இருக்கிறது. அமைச்சரவையில் இடம் பெற்றாலே தவெக கூட்டணியில் விசிக வந்துவிட்டது என கூற முடியாது என திருமாவளவன் பேசியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
