அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் எதிரொலி.! உலக சந்தையில் குறைந்த உணவுப் பொருட்களின் விலை

வாஷிங்டன்: அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டதன் காரணமாக உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் குறையத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலால் தடைபட்ட எரிபொருள் மற்றும் உரம் விநியோகம் தற்போது சீரானதால், உலகளவில் ஜூன் மாதத்தில் ஐ.நா உணவுப் பொருள் குறியீடு 0.3% குறைந்துள்ளது.

ஐ.நா-வின் உணவுப் பொருள் குறியீடு (FFPI) என்பது சர்வதேச சந்தையில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் முக்கியமான உணவுப் பொருட்களின் மாதாந்திர விலை மாற்றங்களை அளவிடும் ஒரு உலகளாவிய குறியீடாகும்.

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மூலம் இது கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது. போர்நிறுத்தம் மற்றும் விநியோக சங்கிலி நிலைமைகள் சீராக உள்ளதன் காரணமாக தானியங்கள் மற்றும் சர்க்கரை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. அதே போல போர் நிறுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 13% அளவுக்கு வீழ்ச்சியடைந்தது போக்குவரத்து மற்றும் விவசாய உற்பத்திச் செலவுகளை கணிசமாக குறைத்துள்ளது.

உணவு விலைகள் குறைந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள், கருங்கடல் பிராந்தியத்தில் கோதுமை அறுவடை எதிர்பார்த்ததை விட வேகமாக நடந்து வருவதால் சந்தைக்கு அதிக வர்த்தகம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர். தானியங்களின் பொதுவான குறியீடு குறைந்திருந்தாலும், அரிசி விலை மட்டும் 3.2% உயர்ந்துள்ளது. ஆசிய நாடுகளில் இண்டிகா ரக அரிசிக்கான தேவை அதிகரித்ததும், போக்குவரத்து செலவுகள் உயர்ந்ததுமே இதற்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டு உள்ளனர்.

 

Related Stories: