×

தண்ணீர் வெளியேற்றம், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் காக்களூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஏரி கரை அமைக்க தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும், ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளாலும் தண்ணீர் மாசடைந்து மீன்கள் செத்து கிடக்கிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், ஏரியில் மீன்கள் செத்து மதிங்குவதால் கடும் துர்நாற்றம் வீசுவதால் கரையில் நடைபயிற்சி செல்வோருக்கு சுவாச கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சி, காக்களூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில், காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி அமைந்துள்ளது.

இந்த, காக்களூர் ஏறி 194 ஏக்கரில் 2682 மீட்டர் நீளமும் 4 மதகுகள், 2 கலங்கல்கள் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரியில் 15 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். இந்த ஏரியிலிருந்து கடந்த காலங்களில் காக்களூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரியை ஒட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உருவானது. இதனால் அதிகளவில் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் உருவாகியுள்ளது.கடந்த வருடம் இந்த ஏரியில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ், ரூ. 2.51 கோடி மதிப்பில் நடைபாதை, இரும்பு தடுப்பு, பார்வையாளர்கள் பார்வையிடும் வகையில் பூங்கா உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியில் உள்ள இறைச்சி கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து காக்களூர் ஏரியில் கொட்டுகின்றனர். மேலும் காக்களூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவு நீரை வெளியேற்ற போதிய வசதி ஏற்படுத்தாததால் கழிவுநீர் ஏரிக்குள் கலந்து விடுகின்றன. இதனால் காக்களூர் ஏரியில் உள்ள தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும், கடந்த ஆண்டு பெய்த மழையால் இந்த ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனிடையே, ஏரியில் ஒரு பகுதி கரை அமைக்க ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஏரியில் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது.

இவற்றின் காரணமாக, ஏரியில் உள்ள மீன்கள் செத்து கரையோரம் மிதக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கரையோர பகுதியில் இந்த மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஏரியில் நடை பயிற்சிக்காக வருபவர்களுக்கும் மற்றும் களைப்பாற வருகைத் தரும் பொதுமக்களுக்கும் சுவாச கோளாறு ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஏரிக்குள் கலக்காதவாரும், பல்வேறு இறைச்சி கழிவுகளை ஏரியில் கொட்டுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Tags : Kakkalur Lake ,Thiruvallur ,
× RELATED அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100%...