- காங்கிரஸ் செயல்பாட்டுக் குழு
- Vijayabaskar
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டி
- சி. விஜயபாஸ்கர்
- மணிக்கம் தாகூர்
- தமிழ்நாடு காங்கிரஸ்
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி…
சென்னை: குட்கா புகழ் சி.விஜயபாஸ்கரை தவெகவில் இணைத்ததற்கு தமிழக காங்கிரஸ் செயற்குழுவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் செயற்குழு கூட்டம் அனல் பறந்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று கூடியது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து எழுந்தது. மூத்த தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
அப்போது முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எழுந்து குட்கா புகழ் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை தவெகவில் இணைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக இன்றைய இளம் தலைமுறை இளைஞர்களை சீரழிக்கும் குட்கா வழக்கு நிலுவையில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவரை கூட்டணி கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைத்தது காங்கிரஸ் கட்சிக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அப்போது முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகையும் எழுந்து விஜயபாஸ்கரை தமிழக வெற்றி கழகத்தில் சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார். இப்படிப்பட்ட ஒருவரை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்போம் என்று இடைத்தேர்தலில் எப்படி வாக்குறுதி அளிக்க முடியும். தமிழக காங்கிரஸ் கட்சியினரும் அதை ஆமோதித்து எப்படி மக்களிடம் வாக்கு கேட்க முடியும் என்றும் தனது எதிர்ப்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதே நேரம் பிரவீன் சக்கரவர்த்தி எம்பி எழுந்து, ‘இது தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்சி விவகாரம். இதில் நாம் தலையிடக்கூடாது’ என்று தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வந்திருக்கிறோம் என்று தமிழக வெற்றி கழகத்தை உயர்த்தி பேசியதாகவும் கூறப்படுகிறது. இவரது பேச்சுக்கு திருநாவுக்கரசர் மற்றும் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சரை தமிழக வெற்றி கழகம் இணைத்திருப்பதை நாம் வரவேற்க முடியாது. இது எப்படி காமராஜர் ஆட்சியாகும். இது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. இதற்கு நாம் கண்டிப்பாக நமது எதிர்ப்பை தமிழக வெற்றி கழகத்திற்கு தெரிவித்தாக வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இதுபற்றி முதல்வர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் பேசியதாகவும் கூறப்படுகிறது. செயற்குழுவில் நடைபெற்ற இந்த விவாதம் தற்போது தமிழக காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
