விதியை மீறி ஆழ்கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குமரிமுனை அருகே உள்ள சின்ன முட்டம் பகுதியில் விதியை மீறி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாக சக மீனவர்கள் புகாரளித்துள்ளனர். விதியை மீறி ஆழ்கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தியதில் இரு தரப்பு மீனவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த சில விசைப்படகுகள் அனுமதிக்கப்பட்ட தூரத்தை மீறி, கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பதாகவும், இதனால் தங்களின் வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் சேதமடைவதாகவும் பாரம்பரிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் அதிநவீன வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால், மீன்வளம் பெருமளவில் அழிவதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விதிமுறை மீறல்கள் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சின்னமுட்டம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மீன்வளத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து திடீர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மீன் பிடிப்பவர்களுக்கு ஆதரவானவர்கள், எதிரானவர் என இரு தரப்புக்கிடையே ஏற்பட்ட மோதலில் மீனவர்கள் சிலர் காயமடைந்தனர்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் படகுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.

Related Stories: