×

விபரீத பயணம் – மொபைல் டார்ச் வெளிச்சத்தில் இயக்கப்பட்ட கர்நாடக அரசு பேருந்து..!

கர்நாடக மாநிலத்தில் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அரசு பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பிட்ட அரசு பேருந்தின் முகப்பு விளக்குகள் ஏரியாததால், பஸ் கண்டக்டர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா சாலைப் போக்குவரத்து கழக (KKRTC) பேருந்து ஒன்று முகப்பு விளக்குகள் (headlights) எரியாத நிலையில் இரவு நேரத்தில் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது; இதனால், ஓட்டுநருக்குப் பாதையைக் காட்ட நடத்துநர் தனது மொபைலில் உள்ள டார்ச் லைட்டை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடகாவின் கலபுராகி நகரிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிஞ்சோலி நகருக்குச் சென்ற கடைசி பேருந்து சேவையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முற்றிலும் இருள் சூழ்ந்த சாலையில் முகப்பு விளக்குகள் எரியாத நிலையில் ஓட்டுநர் பேருந்தை ஓட்ட, நடத்துநர் மங்கலான வெளிச்சம் தரும் அலைபேசி டார்ச் லைட்டை கொண்டு அவருக்கு பாதையைக் காட்ட முயன்றது வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

பயணம் துவங்கியதில் இருந்தே பேருந்தின் முகப்பு விளக்குகள் எரியவில்லையா அல்லது பாதி வழியில் விளக்குகள் எரியாமல் பழுதாகிவிட்டதா.! எப்போது பேருந்தின் முகப்பு விளக்குகள் பழுதடைந்தன என்பது தெரியவில்லை என்றாலும், பாதுகாப்பற்ற சூழலிலேயே பயணத்தை தொடர வேண்டிய கட்டாயம் பயணிகளுக்கு ஏற்பட்ட சம்பவம் வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இரவு நேரத்தில் பயணிகளின் உயிரை பணயம் வைத்து பேருந்தை இயக்கிய இந்த அலட்சியமான செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், KKRTC அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளனர்.

Tags : Karnataka ,Karnataka Road Transport Corporation ,
× RELATED இஸ்ரேலுக்கு அமெரிக்காவை விட்டால்...