×

வாரவிடுமுறை நாளான நேற்று சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்: நீர்மட்டம் 88 அடியாக உயர்வு

 

தண்டராம்பட்டு, ஜூலை 6: விடுமுறை நாளான நேற்று சாத்தனூர் அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு பொழுது போக்கி மகிழ்ந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாதலங்கள் உள்ளது. இவற்றில் வாரந்தோறும் அதிக மக்கள் கூடும் இடமாக சாத்தனூர் அணை திகழ்கிறது. பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் வைத்து பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய பருவ மழை காரணமாக சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாய பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை, விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் தொடர்ந்து 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சாத்தனூர் அணை நீர்மட்டம் 78 அடியாக குறைந்தது. அதன்பின்னர் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கிருஷ்ணகிரி கேஆர்எஸ் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது நீர்மாட்டம் 88 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் சாத்தனூர் அணையில் சிறுவர் பூங்கா, டைனோசர் பார்க், அறிவியல் பார்க், படகு குளம், நீச்சல் குளம், வீரமங்கை பார்க், அறிவியல் பார்க், முயல் கூண்டு பறவைகள் கூண்டு 11 கண் மதகு, முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதனால் விடுமுறை நாட்களில் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.

அதன்படி நேற்று வார விடுமுறைதினம் என்பதால் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. மேலும் குடும்பத்துடன் வருகை தந்த சுற்றுலா பயணிகள் சிறுவர் பூங்கா, டைனோசர் பார்க், அறிவியல் பார்க், படகு குளம், நீச்சல் குளம், வீரமங்கை பார்க், அறிவியல் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் பொழுது போக்கி மகிழ்ந்தனர்.

 

Tags : Sathanur dam ,Thandarampattu ,Tiruvannamalai district ,
× RELATED ஆரணி அருகே அடகுகடை உரிமையாளர் தற்கொலை;...