நாகப்பட்டினம், ஜூலை 6: நாகப்பட்டினம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில், உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டின் சேர்க்கையில் காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கைக்கு வரும் 31ம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த நேரடி சேர்க்கைக்கு வரும் பொழுது மாணவ, மாணவிகள் தங்களின் செல்போன், ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதி சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் கூடுதல் தகவலுக்கு 9499055737, 04365-250126 என்ற எண்களில் உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
