×

தமிழகத்தில் உள்ள கோயில்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது: காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தலைமை தாங்கினார். இதில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், துணைத் தலைவர் கோபண்ணா, பொருளாளர் ரூபி மனோகரன், விஜய் வசந்த் எம்பி, பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அளித்த ேபட்டி:
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையில் பெரிய அளவில் நன்கொடை மோசடி மற்றும் ஊழல் நடந்துள்ளது. இவ்வளவு பெரிய முறைகேடு நடந்தும் பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜ தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்?. இந்த ராமர் கோயில் நிதி மோசடி விவகாரத்தில் முறையான, நேர்மையான விசாரணை தேவை.

தமிழகத்தில் உள்ள கோயில்களை தனியார் வசமோ அல்லது ஆர்.எஸ்.எஸ், பாஜ போன்ற அமைப்புகள் கூறும் ‘பக்தர்கள்’ வசமோ ஒப்படைக்கக் கூடாது. கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் போது தான் சட்டமன்றத்தில் கேள்வி கேட்க முடியும், ஆர்டிஐ மூலம் தகவல் பெற முடியும். ராமர் கோயில் போன்ற தனியார் அறக்கட்டளைகளில் நடக்கும் தவறுகளை ஆர்.டி.ஐ மூலமாகக் கூட கேள்வி கேட்க முடியாது. தமிழகத்திலும் கோயில்களை தனியாருக்கு தர வேண்டும் என பாஜவினர் கேட்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இருக்கிறது. அதில் காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதித்து அறிவிப்போம். முக்கியமான அறிவிப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Congress ,President ,Manikam Tagore ,Chennai ,Tamil ,Nadu ,Sathya Murthy Bhavan ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி...