×

இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் மீது விதித்திருந்த அவசரகாலக் கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு

டெல்லி: மத்திய கிழக்கில் போர்நிறுத்தம் ஏற்பட்டு கப்பல் போக்குவரத்து தொடங்கியதால், இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் மீது விதித்திருந்த அவசரகாலக் கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு நீக்கியது. எரிவாயு விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், தொழிற்சாலைகள், நுகர்வோருக்கான நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் எரிசக்தி தேவையில் ஏற்பட்டு வந்த பதற்றத்தைத் தணிக்கும் வகையில், ஒன்றிய அரசு ஒரு முக்கியமான மற்றும் நிம்மதியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அவசரகாலக் கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தற்போது உடனடியாக ரத்து செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயு வரத்து மீண்டும் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக, முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீர்ச்சந்தி (Strait of Hormuz) வழியாக இந்தியாவுக்கு வரும் எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ஒன்றிய அரசு சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து, அவசரகால விதிகளின் கீழ் எரிவாயு விநியோகத்திற்குச் சில கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது.

தற்போது அந்தப் பகுதிகளில் நிலமை சீரடைந்து, எல்.என்.ஜி எரிவாயு தங்கு தடையின்றி இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளது. தட்டுப்பாடு அபாயம் முழுமையாக நீங்கியதை அடுத்து, எரிவாயு விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து அவசரக் கட்டுப்பாடுகளையும் ஒன்றிய அரசு தற்போது வாபஸ் பெற்றுள்ளது. அரசின் இந்தத் தளர்வு, நாட்டின் தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Tags : EU government ,Delhi ,Union government ,Middle East ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...