×

2வது நாளாக அமோனியா வாயு அகற்றும் பணி: ஆலையை சுற்றி 500 மீட்டர் வரை செல்ல தடை

 

 

திருவள்ளூர்: பெரியபாளையம் இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயு அகற்றும் பணி 2வது நாளாக நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடல் வாழ் உயினங்களான மீன், இறால், நண்டு போன்றவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். இந்நிலையில், கடந்த 21ம் தேதி இந்த தொழிற்சாலையில் பணியாற்றிய வடமாநிலத்தவர்கள் 83 பேர் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டனர். அவர்களை சகதொழிலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மேல் சிகிச்சைக்காக 20 பேர் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இதில், 51 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், ஸ்டான்லி மற்றும் மஞ்சங்காரணை மருத்துவமனையில் ஒடிசா மற்றும் அசாம், ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிந்து தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜோசப் மோகன், ஜோசப் ஜெகன், மேலாளர் டேனியல், ஒப்பந்தக்காரர் சூளூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ் ஆகிய 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து அமோனியா வாயு கசிந்த தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 400 டன் கடல் உணவுகள் சென்னையில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நேற்று காலை கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் உள்ள அமோனியாவை டேங்கர் லாரி மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்றது.

இதனால் பாதுகாப்பு கருதி தீயணைப்பு துறை வாகனங்கள், தண்ணீர் டேங்கர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. மேலும் பெரியபாளையம், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், ஜனப்பன் சத்திரம் பகுதியில் தடுப்புகள் வைத்து பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களை ஆரணி, வெங்கல் வழியாக மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர். அமோனியா வாயுவை அகற்ற பல்வேறு கம்பெனிகளில் இருந்து 15 தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் அமோனியா அகற்றும் பணி நடந்தது. அப்போது அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு குழு, தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு, தமிழக பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் அமோனியா வாயுவை அகற்றுவதால் 500 மீட்டருக்குள் உள்ள பள்ளி, கல்லூரி, தனியார் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொழிற்சாலை அருகில் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சங்கீதா தலைமையில் 10க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து தயாராக இருந்தனர். இது குறித்து கலெக்டர் கவிதா கூறியதாவது: கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 2 டன் அமோனியா இருப்பது பாதுகாப்பு இல்லை என்பதால், பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 2 நாட்களில் இந்த பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 300 மீட்டர் சுற்றளவில் உள்ள தொழிற்சாலை, நிறுவனங்களில் விடுமுறை அளித்து பணியாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அமோனியா வாயு அகற்றும் பணியில் வேடிக்கை பார்க்க வரவேண்டாம் என ஏற்கனவே பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 15 பேர் கொண்ட வல்லுனர் குழு அமோனியா வாயு அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது. தொழிற்சாலை வாயிலில் ஆம்புலன்ஸ் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவர்கள் தயார் நிலையில் உள்ளது. அமோனியா கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்டறிவதற்கான பிரத்யேக கருவியும் தொழிற்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இயந்திரத்தின் மூலம் அமோனியா வாயு கசிந்தால் துல்லியமாக அதனை கண்டறிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அமோனியா அகற்றப்பட்ட பிறகு முழுமையான அறிக்கை பெறப்பட்டு, அதிகாரிகள் மெத்தனம் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ள அமோனியா பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, தேவைப்படும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. அமோனியா அகற்றப்பட்ட பிறகு தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்படும். முழுமையான அறிக்கைக்கு பிறகு தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவது குறித்து முடிவு செய்யப்படும். இன்று (நேற்று) அமோனியா வாயு அகற்றும் பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று அமோனியா வாயு அகற்றும் பணி 2வது நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தொழிற்சாலையின் 3 சேமிப்பு டேங்குகளில் இருந்த சுமார் 2 டன் அமோனியா டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இறால் ஆலையில் குழாய்களில் தேங்கியுள்ள அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடங்கியது.

Tags : THIRUVALLUR ,PERIYAPALAYAM ,KANNIGIPERE NEAR PERIYAPALIAM, ,THIRUVALLUR DISTRICT ,
× RELATED அமைச்சரவையை சினிமாவாக நினைக்கிறார்...