×

கரூர் சம்பவத்துக்கு கணக்கு தீர்க்காமல் விட மாட்டோம் என்ற அமைச்சரின் பேச்சுக்கு வீரபாண்டியன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்திருப்பது கண்டனத்திற்குரியது. அரசின் நடவடிக்கைகள், பிற அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகள் மீது விமர்சனங்களை முன் வைப்பதற்கும், சிலவற்றை கண்டிப்பதற்கும் கூட அனைவருக்கும் உரிமை உண்டு; இதனை தவிர்த்து, அரசியல் களத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னைகளை பேசுவதும், அதுவும் பொது வெளியில் தரம் தாழ்ந்து பேசுவதும் சட்ட அத்துமீறலாகும்.

அதேபோல், பொதுப்பணித்துறை அமைச்சர், கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, அதற்கு “கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம்“ என்று அவரது கட்சி கூட்டத்தில் பேசியிருப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு பெருமை சேர்க்காது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அரசியல் களத்தில் நாகரிகத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் பேணி பாதுகாப்பதில், பொது வாழ்வில் உள்ள அனைவரும் அக்கறை காட்டுவது அவசியம்.

Tags : Veerapandian ,Karur ,Chennai ,Secretary of State ,Communist Party of India ,Anita R. ,Radhakrishnan ,MLA ,
× RELATED உள்ளாட்சி தேர்தல் சீட் ஒதுக்கீடு...