×

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடங்கியது. அமோனியா வாயுவை அகற்றும் ஆலையை சுற்றி 500 மீட்டர் வரை செல்ல தடை விதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமோனியா வாயு பாதுகாப்பாக அகற்றப்படும். இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடர்பாக ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த இறால் ஆலை தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் இருந்த 400 டன் கடல் உணவு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், இறால் பதப்படுத்தும் ஆலையில் உள்ள சுமார் 2 டன் அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடங்கியது. வாயு அகற்றும் பணிகள் நடைபெறுவதால் தொழிற்சாலையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமோனியா வாயு அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா நேரில் ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக ஆட்சியர் கவிதா கூறுகையில், மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். தொழிற்சாலையில் உள்ள அம்மோனியா பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகிறது என்று தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரி, மருத்துவ குழு, தேசிய மீட்பு படை, தீயணைப்பு துறை மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட அதிகாரிகள் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் நூற்றுகணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிற்சாலையை ஒட்டியுள்ள 300 மீட்டர் சுற்றளவில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக ஜளப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து பெரியபாளையம் வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அகற்றும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ குழு, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை தயார் நிலையில் உள்ளனர்.

Tags : Periypalayam ,Thiruvallur district ,Thiruvallur ,
× RELATED தவெக வெளிப்படையாக குதிரை பேரம்...