தங்கம் விலை மீண்டும் அதிரடி; பவுனுக்கு ரூ.1200 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் எகிறியது

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1200 உயர்ந்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் எகிறியது. தங்கம் விலை கடந்த மாதம் (ஜூன்) தொடக்கத்தில் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. தொடர்ந்து தங்கம் விலை வெகுவாக குறைய தொடங்கியது. அதன் பிறகு கடந்த மாதம் 30ம் தேதியில் இருந்து தங்கம், வெள்ளி விலை ஒரே நாளில் 2 முறை மாற்றம் என்ற வகையில் இருந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,400க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7200க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து மாலையில் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,550க்கும், பவுனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,400க்கும் விற்பனையானது. இதன் மூலம் ஒரே நாளில் காலை, மாலை என தங்கம் விலை பவுனுக்கு ரூ.2400 உயர்ந்தது. இதே போல வெள்ளி விலையும் காலை, மாலை என கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில் நேற்று மேலும் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,700க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 9,600க்கும் விற்பனையானது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று காலை உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2.60 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்து வருவது நகை வாங்குவோர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: