கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அக்யூஸ்ட் எல்லாம் திமுகவை குற்றம் சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது: அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அக்யூஸ்ட் எல்லாம் திமுகவை குற்றம் சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு சட்டரீதியாக பதில் சொல்வோம், நடவடிக்கை எடுப்போம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி:
கரூரில் நடைபெற்ற சம்பவத்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பொய்யும் புரட்டுமாக பேசி உள்ளார். கரூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் ஆளும் கட்சியிலே சேர்ந்துவிட்ட காரணத்தினால் கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அந்த தொகுதி மக்களுடைய கவனத்தை திசை திருப்புகிற நோக்கத்தில் இப்படி பேசியிருக்கிறார்.

கரூர் சம்பவத்தின் போது எங்கள் தலைவர் எடுத்த நடவடிக்கையை அனைவரும் பாராட்டினார்கள். நாங்கள் அமைத்த எஸ்ஐடி குழுவின் விசாரணை ஒழுங்காக நடைபெற்றது. ஆனால் இவர்களே சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டார்கள். சிபிஐ விசாரணையும் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரதத்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் ஆதவ் அர்ஜுனா. அவர் தான் மெயின் அக்யூஸ்ட். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணைக்கு விஜய் இரண்டு முறை போய் வந்தார். புஸ்ஸி ஆனந்த் , நிர்மல் குமார், முதல்வரின் தனி செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஜெகதீஷ், ஆதவ் அர்ஜுனா என இவர்கள் எல்லாம் ஏ1, ஏ2, ஏ3 என அக்யூஸ்ட லிஸ்ட்டில் உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்கிற போது வழக்கை பற்றி ஒரு அக்யூஸ்ட், வழக்கின் விசாரணையை கெடுக்கிற வகையில் பேசி இருக்கிறார். ஆகவே இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக திமுகவின் சார்பில் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்கிறது. அதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர உள்ளோம். இவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மீது கேரளாவில 928 கோடிக்கு லாட்டரி சீட்டு ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இவருடைய மனைவி அந்த வழக்கில் ஒரு அக்யூஸ்ட். இவர் இந்த வழக்கில் ஒரு அக்யூஸ்ட். இப்படிப்பட்ட அக்யூஸ்ட்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொண்டு எங்களை குற்றம் சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களுக்கு உரிய வகையிலே சட்டரீதியாக நாங்கள் பதில் சொல்வோம் நடவடிக்கை எடுப்போம்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது சர்வாதிகாரத்தின் உச்சம். இதை சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம். திமுக என்பது வெட்ட வெட்ட துளிர்க்கிற மரம், அரைக்க அரைக்க மணக்கிற சந்தனம், தீட்ட தீட்ட ஒளிர்கிற வைரம் என்பதை இன்றைக்கு புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிற புதியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: