திருமயம், ஜூலை.3: தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. அப்போது அரசு அலுவலகங்கள், அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் உருவப்படம், சிலைகள், பெயர்கள் உள்ளிட்டவைகள் மறைக்கப்பட்டது. பெரும்பாலும் இது போன்ற நேரங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள், படங்கள், பெயர்கள் துணி கொண்டோ அல்லது பேப்பர் மூலமாகவோ மறைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் திருமயம் படித்துறை பஸ் ஸ்டாப் சுமார் ரூ. 6லட்சம் செலவில் அப்போதைய அமைச்சர் ரகுபதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் ரகுபதியால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் முன்னாள் அமைச்சரின் பெயர் பஸ் ஸ்டாப் முகப்பில் பெரிய அளவில் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறையின் போது முன்னாள் அமைச்சர் ரகுபதியின் பெயர் மட்டும் சுண்ணாம்பு பூச்சுகளால் பூசப்பட்டது.
இதனை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களை கடந்த நிலையில் அதிகாரிகளின் மெத்தன போக்கால் இதுவரை முன்னாள் அமைச்சர் ரகுபதியின் பெயர் சுண்ணாம்பு பூச்சிகளால் அழிக்கப்பட்டிருப்பது திமுகவின் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இது அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுண்ணாம்பு பூச்சுகளால் அழிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதியின் பெயரை மீண்டும் தெளிவாக எழுத வேண்டும் என திமுகவினர் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
