சென்னை: பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அதிமுக மாஜி அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்த விழாவை முதல்வர் விஜய் புறக்கணித்தார். இதனால் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர்கள் தவெகவில் இணைந்தனர். இந்த இணைப்புக்கு பல்வேறு அமைப்பினர் கடும் விமர்சனத்தை வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அதிமுக தொடர்ந்து பலவீனம் அடைந்து வருவதால் சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பின்போது எஸ்.பி.வேலுமணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், தவெக அரசுக்கு ஆதராகவும் ஓர் அணியாக செயல்பட்டனர்.
தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தும், எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படாததால் விரக்தியடைந்த அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். மீண்டும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அதிமுகவில் சேர்ந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதனால் எடப்பாடியுடன் இணைந்து செயல்பட மறுத்து வருகின்றனர்.
இதற்கிடையே அதிருப்தி அடைந்த மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ உள்ளிட்ட 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் அதிமுகவில் இருந்து விலகி முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைய திட்டமிட்டனர். ஆனால், முதல்வர் விஜய் தனது தலைமையில் தவெகவில் இணைவதை முற்றிலும் தவிர்த்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் ஆனந்த் தலைமையில் இணைவதற்கு திட்டமிட்டனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணையும் விழா மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இசிஆர் சாலையையொட்டி உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நேற்று காலை நடந்தது. இதில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் 5 முன்னாள் அமைச்சர்கள், 15க்கும் மேற்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் தங்களது ஆதரவாளர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தங்களை தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அப்போது, அமைச்சர் ஆனந்த் அனைவருக்கும் தவெக கட்சி துண்டை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜலட்சுமி, ஜெகதீஷ்வரி, ரமேஷ், பர்வேஸ், ஸ்ரீநாத், விஜய் பார்த்திபன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக சிபிஐயில் குட்கா வழக்கு, லஞ்ச ஒழிப்பு துறையில் சொத்துக்குவிப்பு வழக்கு, மணல் குவாரியில் அதிக அளவில் ஜல்லி கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தவெகவை வாஷிங் மெஷின் என விமர்சித்து வரும் நிலையில், ஊழல் வழக்குகளை சுமக்கும் முன்னாள் அமைச்சர்கள் இணைப்பு விழாவில் கலந்துகொண்டால் விமர்சனம் மேலும் அதிகரிக்கும் என நினைத்து இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு அறப்போர் இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல திமுக துணை பொது செயலாளர் கனிமொழி, அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
* எடப்பாடி ஒரு கார்ப்பரேட் கம்பெனி செங்கோட்டையன் காட்டம்
நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொது செயலளார் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், `கடந்த 5 ஆண்டுகள் எதிர்கட்சி தலைவராக தேசியக்கொடியுடன் வலம் வந்தார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, எதிர்கட்சி தலைவர் பதவியையும் மக்கள் பிடுங்கி விட்டனர். எடப்பாடி பழனிசாமி ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அவர், பின்னாடி 10 பேர்தான் உள்ளனர். அங்கு சனி பிடித்துள்ளது. இங்கு குரு உள்ளது’ என்றார்.
