புதுக்கோட்டை, ஜூலை.2: புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தை விபி ஜிராம்ஜி என பெயர் மாற்றுவதை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய 288 பேரை கைது செய்த போலீசார். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை விபி ஜிராம்ஜி என பெயர் மாற்றியதைக் கண்டித்தும், உடனடியாக திட்டத்தை திரும்பப்பெற்று பழைய திட்டத்தையே தொடர வலியுறுத்தியும், அடையாள அட்டை வைத்து இருக்கும் அனைவருக்கும் பாகுபாடு இன்றி வேலை கொடுக்கவும், கருவிழி பதிவு, கைரேகை பதிவு என்கின்ற பெயரில் மாற்றுதிறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை பறிக்காதே எனவும் கோஷ மிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாற்றுத் திறனாளிகள் சட்ட நகலை எரித்தும், கருப்பு பேட்ஜி அணிந்தும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநகர செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.கணேஷ், துணைத் தலைவர் ஜி.கிரிஜா மற்றும் நிர்வாகிகள் எஸ்.செல்வி, எம்.மாலதி, எஸ்.தீபன், ஆர்.நவாஸ்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணமேல்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.தங்கவேல் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் பி.மாலதி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.புவனேஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேற்படி இடங்களில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். இதில் 288 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
