சின்னமனூர் அருகே டிராக்டர் மோதி பெண் பலி: மற்றொருவர் படுகாயம்

 

சின்னமனூர், ஜூலை 2: சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ் மனைவி சுதா(45). இவர்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் சுதா கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் வெளியூர் சென்ற நிலையில் இரவு ஊர் திரும்பினார். தேனி சாலையில் சின்னமனூர் அடுத்த சீலையம்பட்டி பூமார்க்கெட் நர்சரி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவருடன் கூலி வேலை செய்யும் சீலையம்பட்டியை சேர்ந்த காவேரி(65) என்பவர் அப்பகுதியில் வந்தபோது இருவரும் சந்தித்தனர். பின்னர், அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிராக்டரின் முன்புற டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சுதா, காவேரி ஆகியோர் மீது மோதியது. இதில் சுதா கீழே விழுந்த நிலையில் அவரது தலையில் டிராக்டர் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவேரி படுகாயமடைந்தார். மேலும், அந்த டிராக்டர் முன்னால் சென்றுகொண்டிருந்த டூவீலர் மீது மோதியது. இதில் அதிலிருந்த பெண் உட்பட இருவர் நல்வாய்ப்பாக தப்பினர். அப்பகுதியினர் காவிரியை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதிவேக வாகனங்களால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த மறியலால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போடி டிஎஸ்பி ரமேஷ், சின்னமனூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் கம்பத்தை சேர்ந்த சுரேஷ்(40) என்பவரை கைது செய்தனர். மேலும், டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: