அரசியலமைப்பு, ஜனநாயக அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆக.6ம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

புதுடெல்லி: அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு எதிராக மக்களை திரட்டும் வகையில் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் அரசியல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா கூறுகையில்,” வேலையின்மை, விலைவாசி உயர்வு, கிராமப்புற நெருக்கடி, கூட்டாட்சி, கல்வி மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி கிராமங்கள், நகரங்களில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும்.

இது மிகவும் சவாலான மற்றும் கவலைக்குரிய சூழல். நாடு பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி மற்றும் சமூக கலாச்சார நெருக்கடி என பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. நாட்டின் குடியரசு, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மக்களை சென்றடைவதும், அவர்களை திரட்டுவதும் ஊக்கப்படுத்துவதும் அவசியமாகும். இதற்காக ஆகஸ்ட் 6ம் தேதிமுதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை நாடு தழுவிய அரசியல் பிரச்சாரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ள உள்ளது” என்றார்.

Related Stories: