×

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் வேறு கட்சிக்கு பேரம் பேசியதாக சென்னையில் பிரபல யூடியூபர் திருநாவுக்கரசு கைது: ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை

சென்னை: ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை வேறு கட்சிக்கு மாற பேரம் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் படி பிரபல யூடியூபரும் தேர்தல் கருத்துகணிப்பு நிபுணருமான திருநாவுக்கரசுவை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையில் தற்போது தவெக தனிப்ெபரும்பான்மை இல்லாத கட்சியாக உள்ளது. இருந்தாலும் தவெக, திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லிம் லீக், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, அமமுகவில் வெற்றி பெற்ற எம்எல்ஏ அதரவுடன் கடந்த மே 10ம் தேதி முதல்வராக விஜய் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அதிமுகவில் வெற்றி பெற்ற 2 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதில் 4 முன்னாள் எம்எல்ஏக்கள் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். மேலும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களாக இருந்த சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நாளை தவெகவில் இணைய உள்ளனர்.இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை சொத்துக்குவிப்பு வழக்குகளை காட்டி தவெக குதிரை பேரம் மூலம் தங்களது கட்சியில் இணைத்து வருவதாக அதிமுக சார்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், தவெக எம்எல்ஏக்களை மாற்று கட்சியில் இழுக்க ரகசிய வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (தனி) தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு இளையராஜா என்பவர் எம்எல்ஏவாக உள்ளார். இவரிடம் பிரபல யூடியூபரும் இந்திய ஜனநாயகம் உத்திகள் என்ற பெயரில் தேர்தல் கருத்து கணிப்பு நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர் தவெகவில் இருந்து வேறு கட்சிக்கு மாற பல கோடி ரூபாய்க்கு பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அவரது எம்எல்ஏ விடுதியில் பல முறை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக ரகசியமாக வேறு அரசியல் கட்சியின் தொழிலதிபர்கள் தவெக எம்எல்ஏவிடம் டெலிகிராம் செயலி மூலம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று பிரபல யூடியூபர் திருநாவுக்கரசு மனைவி தனது கணவரை அதிகாலை 2 மணிக்கு போலீசார் என்று 2 பேர் அழைத்து சென்றதாகவும், அவரை யாரேனும் கடத்தி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தரும்படி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதேநேரம் ஊத்தங்கரை (தனி) தொகுதி எம்எல்ஏ இளையராஜா என்பவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் யூடியூபரும் (ஐபிடிஎஸ்) என்ற அமைப்பு பெயரில் தேர்தல் கருத்து கணிப்பு வெளியிடும் திருநாவுக்கரசு தன்னிடம் வேறு கட்சியில் இணைய பல கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி, திருவல்லிக்கேணி போலீசார் யூடியூபரான திருநாவுக்கரசை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் வேறு கட்சிக்கு மாற பேரம் பேசியது தெரியவந்தது. அதைதொடர்ந்து யூடியூபர் திருநாவுக்கரசு மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக 2 தொழிலதிபர்களையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவெக அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் தங்களது கட்சியில் சேர்த்து வரும் நிலையில், தவெகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர்களின் கட்சி எம்எல்ஏவை வேறு கட்சிக்கு பேரம் பேசிய விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thirunavukkarasu ,Chennai ,Thaveka MLA Ilayaraja ,YouTuber ,Tamil Nadu ,Thaveka ,
× RELATED 2026 ஜூன் மாதத்தில் 96.75 லட்சம் பயணிகள்...