திருமயம், ஜூன் 30:திருமயம் அருகே நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெக வில் சேர விருப்பம் தெரிவித்ததால் திருமயம் தொகுதி அதிமுக கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டவர் முன்னாள் எம்எல்ஏ பி.கே. வைரமுத்து. இவர் கடந்த நான்கு முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு முறை வெற்றியும் மூன்று முறை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு பெரும்பாலானோர் மாற்றுக் கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.
இதனால் அதிமுக கட்சியின் எதிர்காலம் பெரும் சவாலாக உள்ளது. அதேசமயம் அதிமுக கட்சியில் இருந்து எதிர் கருத்து தெரிவிக்கும் நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக கட்சியினரிடையனயே அதிருப்தி எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருமயம் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளை கொண்டு திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தில் முன்னாள் எம்எல்ஏ பி கே வைரமுத்து தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பி எல் ஆர் பழனிவேலு, அரிமளம் நகரச் செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பெரும்பாலானோர் அதிமுக தலைமையின் மீது அதிருப்தியை தெரிவித்தனர். மேலும் இதே நிலை நீடித்தால் எதிர்வரும் எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற முடியாது என வேதனை தெரிவித்தனர். மேலும் கட்சிக்காக உழைத்தவருக்கு பதவி வழங்காமல் அதிமுக தலைமை எதைச் அதிகார போக்கில் நடந்து கொள்வதாக கவலை தெரிவித்தனர். அதே சமயம் நிர்வாகிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலானோர் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனால் திருமயம் தொகுதி அதிமுக கூடாரம் முழுவதும் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் எம்எல்ஏ பி கே வைரமுத்துடன் கேட்டபோது எனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் என்னுடன் பயணித்தவர்கள் நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டனர்.
இனிமேல் அவர்கள் சொல்வதை நான் கேட்கவே இந்த கூட்டம் நடத்தப்பட்டது. எதிர்கால அரசியலில் எனக்கு பொறுப்புகள் பெறுவதில் விருப்பமில்லை. இருந்த போதிலும் என்னுடன் பயணித்த நிர்வாகிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு முடிவுகள் இறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.
