×

பரமக்குடி அறிவுசார் மையத்தில் மும்முனை மின்சாரம் இல்லை தேர்வாளர்கள் கடும் பாதிப்பு

 

பரமக்குடி, ஜூலை 1: பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள அறிவு சார் மையத்தில் மும்முனை மின்சார கொடுக்காததால் தேர்வாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் மும்முனை மின்சார இணைப்பு வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.1.50 கோடி செலவில் அனைத்து மாவட்டம், தாலுகா மற்றும் 129 கிராம பகுதிகளில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வாளர்கள் பயன்படுத்தும் விதமாக, முழுவதும் தொழில்நுட்ப ரீதியான அறிவு சார் மையங்கள் தொடங்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கடந்த ஆறு மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தினமும் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வாளர்கள் புத்தகங்கள் மற்றும் கணினிகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு மும்முனை மின்சாரம் கொடுக்கப்படாததால் தொடர்ந்து தேர்வாளர்கள் கணினிகளை பயன்படுத்த முடியாமலும், பேன், லைட் பயன்படுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் உள்ளனர். மும்முனை மின்சாரம் பெறுவதற்கு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய முதலீட்டுத் தொகையை ஆன்லைனில் செலுத்துமாறு நகராட்சிக்கு மின்சார வாரியம் அறிவிப்பு கொடுத்த நிலையில் அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டனர்.

தேர்வாளர்கள் மாணவ, மாணவிகளின் நலனுக்காக கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அறிவுசார் மையத்தை முடக்க நினைக்கும் நகராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கழிப்பறை செப்டிக் டேங்கில் இருந்து காற்றை வெளியேற்றும் குழாய் மூடப்பட்டுள்ளதால், அசுத்தமான காற்றுகள் கழிப்பறை வழியாக வெளியேறி அறிவுசார் மையத்திற்குள் வருவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அறிவுசார் மையத்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Paramakudi Knowledge Center ,Paramakudi ,Knowledge Center ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்