கொள்ளிடம் அருகே மண் அரிப்பால் 200 குடியிருப்பு வீடுகளை கடல் நீர் சூழும் அபாயம்

 

கொள்ளிடம்,ஜூலை1: கொள்ளிடம் அருகே மண் அரிப்பால் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளை கடல் நீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தடுப்பு சுவர் கட்ட மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. மாவட்டத்திலேயே இயற்கை துறைமுகமாக இருந்து வரும் இந்த துறைமுகத்திலிருந்து 6000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். துறைமுகத்திலிருந்து கடற்கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் சீற்றத்தின் போதும், அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களிலும், பருவ மழைக்காலத்தின் போதும் தொடர்ந்து கடற்கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து ஏற்பட்டு வரும் மண் அரிப்பினால் அங்குள்ள 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கடல் நீர் சூழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் அமைந்துள்ள இடத்திற்கும், கடற்கரைக்கும் வெறும் 150 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்து வருகிறது. தொடர்ந்து மண்ணரிப்பு ஏற்படுவதால் மிக விரைவில் குடியிருப்புகளை தண்ணீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு கடற்கரையில் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ந்து கடற்கரையில் வலிமையான தடுப்புச் சுவர் கட்டப்பட வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தடுப்புச் சுவர் கட்டும் வகையில் கரையையொட்டி பாறாங்கற்களை கொட்டியும் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைப்பதன் மூலமும் மண்ணரிப்பை தடுக்க முடியும்.

எனவே உடனடியாக மண்ணரிப்பை தடுக்கும் வகையில் பழையாறு கடற்கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பு சுவர் கடல் சீற்றத்தால் பயனற்ற நிலையில் இருந்து வருகிறது. எனவே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கிராமப் பகுதி வரை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: