கீழ்வேளூர் ஒன்றியத்தில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத தேவூர் தேன்மொழி நகர்

 

நாகப்பட்டினம், ஜூலை 1: நாகப்பட்டினம் அருகே தேவூர் தேன்மொழி நகரில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவூர் தேன்மொழி நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக நகரில் உள்ள 5 தெருக்களிலும் சாலையானது பிரதான சாலையில் இருந்து 10 அடிக்கும் கீழே உள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் மேலே ஏறி வர முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் பைக், நான்கு சக்கர வாகனங்களை பிரதான சாலையில் இருந்து தங்களது வீடுகளுக்கு ஓட்டி செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

வீடுகள் முழுவதும் பள்ளத்தில் இருப்பதாலும் முழுவதும் மண் சாலையாக மட்டுமே இருப்பதால் மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாமலும் உள்ளதாகவும், தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களது குடியிருப்பு பகுதிக்கு அனைத்து அரசு அங்கீராமும் கிடைத்தும் எந்தவித அடிப்படை வசதி செய்து தராமல் உள்ளதாகவும், இது குறித்து அனைத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் மனம் வருந்தி கூறுகின்றனர். நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் பிரதான சாலை மட்டத்தில் தார் சாலை அமைத்து, மின்சார வசதி, பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: