ஐநா: ஐக்கிய நாடுகள் சபையில் 2026 தீவிரவாத எதிர்ப்பு வார விவாதத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: உலகளாவிய தீவிரவாத நிதி உதவி மற்றும் பணமோசடி தடுப்பு கட்டமைப்பின் இன்றியமையாத தூணாக எப்ஏடிஎப் அமைப்பு திகழ்கிறது. அதன் பணிகள் தொழில்நுட்பம் சார்ந்தவை, சான்றுகள் அடிப்படையிலானவை. சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்டவை. இத்தகைய எப்ஏடிஎப் அமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் நாடுகள் உண்மையில் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கு அஞ்சுகின்றன.
எப்ஏடிஎப் மதிப்பீட்டில் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய நாடுகள், அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்தி, நிதி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, தீவிரவாத நிதி உதவிக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்கள் நிலப்பரப்பு, நிதி அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டியது ஒவ்வொரு நாட்டின் கடமை.
புதிய தொழில்நுட்பங்கள், கிரவுட்பண்டிங், மெய்நிகர் சொத்துகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தீவிரவாத நிதி பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க எப்ஏடிஎப் தரநிலைகளை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர் கூறினார். எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, சர்வதேச அளவில் நடக்கும் பணமோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டு அமைப்பாகும்.
