பண்ருட்டி அருகே பரபரப்பு நடுரோட்டில் 3 பேரை கொலை செய்ய முயற்சி: கல்லை தூக்கி போட்டு தாக்கிய 3 பேர் கைது

பண்ருட்டி: கடலூர்மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் காந்தி நகரை சேர்ந்தவர்கள் அலெக்சாண்டர்(22), ரமேஷ்(27), விக்னேஷ்(24). இவர்கள் கடந்த 28ம் தேதி வான்பாக்கம் பகுதியில் உள்ள பாரில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கீழ்மாம்பட்டை சேர்ந்த சூர்யா(20), கவுதம்(20), மோகன்(20) ஆகிய 3 பேரும் நீங்க எந்த ஊர்? எனக் கேட்டதில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் முறைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழகம் அருகே காரில் அலெக்சாண்டர் உள்பட 3 பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த சூர்யா, கவுதம், மோகன் ஆகியோர் காரை வழிமறித்து, 3 பேரையும் காரில் இருந்து இறக்கி ஆபாசமாக திட்டி, கையாலும், அருகில் கிடந்த உடைந்த சிமென்ட் கல்லை எடுத்தும் தாக்கியுள்ளனர். மேலும் இதே கல்லால் அடித்து கொன்று விடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் படுவேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே? என கேட்டு கமென்ட் செய்திருந்தனர். இதுகுறித்து அலெக்சாண்டர் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், (பொறுப்பு) சப்-இன்ஸ்பெக்டர் திவாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூர்யா, கவுதம், மோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: