×

கிள்ளியூரியில் 1144 ஹெக்டேரில் அணு கனிம சுரங்கம் ஒன்றிய அரசின் திட்டத்துக்கு தமிழகஅரசு துணை போவதா? அரசாணையை ரத்து செய்ய அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியூரில் தமிழக அரசு 1144 ஹெக்டேர் நிலத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 2020ம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து அந்த நிலங்களை அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஒதுக்கீடு செய்து 2021 ஜூலை 11ம்தேதி ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்தது.

அதன் தொடர் நடவடிக்கையாக அங்கு அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஒன்றிய அரசு பிறப்பித்த ஆணை ஐந்தாண்டுகளுக்கு மட்டும் தான் என்பதால், இந்த திட்டம் காலாவதியாகி விட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நில ஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து கடந்த 10ம்தேதி தமிழக அரசு, அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி அரசாணை பிறப்பித்திருக்கிறது.

ஆனால், மக்களின் விருப்பத்திற்கு மாறாக கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 1144 ஹெக்டேர் நிலம் ஒதுக்கிய ஆணையின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu government ,Union government ,Killiyuri ,Anbumani ,Chennai ,PMK ,Arumanal plant ,Manavalakurichi, Kanyakumari district ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில்...