சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 6 மாணவர்கள் கைது: போலீசார் நடவடிக்கை

 

சென்னை: சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் அவ்வப்போது இளைஞர்கள் சிலர், அடையாறு, அண்ணா நகர், ராஜிவ்காந்தி சாலை, அண்ணாசாலை, மெரினா காமராஜர் சாலை, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை போன்ற பகுதிகளில் நள்ளிரவில் பைக் ரேசில் ஈடுபட்டு வந்தனர். போலீசாரின் தீவிர கண்காணிப்பு காரணமாக சமீப காலமாக இந்த பைக் ரேஸ் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, மேம்பாலங்கள் இரவு நேரத்தில் இரும்பு தடுப்பு வைத்து மூடப்படுகிறது. அத்துடன் வாகன சோதனையையும் தீவிரப்படுத்தி வந்ததால் பைக் ரேஸ் குறைந்த நிலையில், சில இடங்களில் மீண்டும் பைக் ரேஸ் தலைதூக்கி வருகிறது.

சென்னை மெரினா பீச்சில் இருந்து சாந்தோம் சாலை வழியாக அடையாறு, பெசன்ட் நகர், எல்பி சாலை மற்றும் எலியட்ஸ் பீச் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பைக் ஓட்டி வந்த ஒரு வாலிபர் ஆபத்தான வகையில் வீலிங்க் செய்து கொண்டு சென்றார். மற்றொரு பைக்கில் 2 வாலிபர்கள் செல்கிறார்கள், அவர்களில் பின்னால் உட்கார்ந்து இருக்கும் வாலிபர் சாலை தடுப்பை (பேரிகார்டு) இழுத்து கொண்டு ஆபத்தான முறையில் சென்றனர்.

அந்த இரும்பு தடுப்பு சாலையில் தேய்த்து கொண்டே சென்றபோது தீ பொறி ஏற்பட்டு, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபர்களை அடையாளம் காண சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர். அதன் அடிப்படையில்; பைக் சாகசத்தில் ஈடுபட்ட 5 பள்ளி மாணவர்கள், ஒரு கல்லூரி மாணவர் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாலிக்காக பேரிகார்டுகளை பைக்கில் இழுத்துச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: