துரைப்பாக்கம்: பெருங்குடி அரசு மருத்துவமனையில் தவெக நிர்வாகிகள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்தும், அரசு மருத்துவமனையின் பதிவேடுகளை ஆய்வு மேற்கொள்வதும் வீடியோ எடுத்து, ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று முன்தினம் நடந்தது. சென்னை இசிஆர் பாலவாக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதி அல்லாத தவெக 184வது வட்ட செயலாளர் ஒஎம்ஆர் ஹரி (எ) டில்லிபாபு, பெருங்குடி 184வது வார்டில் உள்ள சென்னை மாநகராட்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து, அதனை ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குழந்தைகளுக்கு போடப்படும் போலியோ சொட்டு மருந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை செவிலியர்கள் மூலம் அந்த அந்த பகுதியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பெருங்குடி பகுதியில் மக்கள் பிரிதிநிதி அல்லாத தவெக வட்டச் செயலாளர் டில்லிபாபு அவருடைய ஆதரவாளர்களுடன் சென்று மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து விட்டும், மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தும் மக்கள் பிரிதிநிதி போன்று காட்டிக் கொண்டு சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டுள்ளது பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.
தவெக பொது செயலாளர், அமைச்சர் என்.ஆனந்த் மக்கள் பிரிதிநிதி அல்லாதோர் அரசு சார்ந்த இடங்களில் ஆய்வு மேற்கொள்வது போன்ற செயலில் ஈடுபட கூடாது என்று அறிவிப்பை வெளியிட்டாலும் அதை காற்றில் பறக்கவிட்ட தவெக நிர்வாகிகள் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.
