விழுப்புரம், ஜூன் 30: போதைப்பொருள் சர்ச்சை புகாரில் சிக்கிய தவெக அமைச்சரை பதவிநீக்கம் செய்யக்கோரி விழுப்புரத்தில் போலீசாரின் தடையைமீறி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட 280 பேரையும் கைது செய்தனர். பொதுஇடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானதை தொடர்ந்து தவெகவை சேர்ந்த மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் சரத்குமாரை பதவிநீக்கம் செய்யக்கோரி நேற்று திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி,விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நகராட்சி திடலில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்எல்ஏ கண்டன உரையாற்றினார்.
இதில் வானூர் தொகுதி எம்எல்ஏ கௌதம்திராவிடமணி, திமுக ஆதிதிராவிடர் நலக்குழு புஷ்பராஜ், பொதுக்குழு உறப்பினர்கள் கண்ணப்பன், பிரேமாகுப்புசாமி, இளைஞரணி அமைப்பாளர் தினகரன், துணைஅமைப்பாளர் மணிகண்டன், எஸ்சிஎஸ்டி அணி செல்வபிரேம், சேர்மன் தமிழ்செல்விபிரபு, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, ராஜா, சந்திரசேகர், கணேசன், சீனுசெல்வரங்கம், கணேசன், புஷ்பராஜ், ராஜூ, மைதிலிராஜேந்திரன், முரளி, நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றி, ஜெயமூர்த்தி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனிடையே பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என்று கூறினர். இதை கண்டித்து லட்சுமணன் எம்எல்ஏ தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது திமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் லட்சுமணன், கௌதம் உள்ளிட்ட 280 பேரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
