×

இட பிரச்னை தகராறில் வாக்குவாதம்; தந்தையை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த மகன்: உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

 

உளுந்தூர்பேட்டை, ஜூன் 30: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.கொணலவாடி கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன் ராமசாமி (71). தச்சு வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் தனியாக வசித்து வந்தார். தனது பெயரில் உள்ள 9 சென்ட் வீட்டுமனை இடத்தை விற்க முடிவு செய்திருந்தார். அந்த இடத்தில் இவருடைய மகன் கலியபெருமாள் (47) என்பவர் சிமெண்ட் ஷெட் அமைத்து இருந்தார். மேலும் தனக்கு சேரவேண்டிய பாகத்தை தனக்கு வழங்குமாறு கேட்டும் தந்தை ராமசாமி தர மறுத்துள்ளார். இந்த நிலையில் அந்த இடத்தை விற்க ராமசாமி முயன்ற போது அதற்கு விற்பனை செய்வது என்றால் தனக்கே விற்பனை செய்யுமாறு கலியபெருமாள் கேட்டுள்ளார்.

அதற்கும் தர மறுத்த ராமசாமி சிமெண்ட் ஷெட்டை அகற்றுவதற்காக ஆட்களை நேற்று முன்தினம் மாலை அழைத்து சென்றுள்ளார். அப்போது தந்தை மகனுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் இரும்பு ராடால் தந்தை ராமசாமியை மகன் கலியபெருமாள் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராமசாமி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ஆனந்தன், கொலை வழக்கு பதிவு செய்து கலியபெருமாளை கைது செய்தனர்.

Tags : Ulundurpettai ,Ramasamy ,Narayan ,Pu. Konalavadi ,Kallakurichi district ,
× RELATED பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி...