திருச்செங்கோடு, ஜூன் 30: எலச்சிபாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, மண்டியிட்டு பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் மண்டியிட்டும், பிச்சை எடுத்தும் அரசிடம் கோரிக்கை வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் முன்னிலை வகித்தார்.
எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்திற்கு பேரணியாக வந்த விவசாயிகள், விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், 5 ஏக்கர் விவசாயிகளுக்கு முழுமையான தள்ளுபடியும், அதற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர் கடன் தள்ளுபடியும் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் தமிழக முதல்வர் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த போராட்டம் குறித்து, மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் கூறுகையில், `தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்காக தர்மபுரியில் பேரணி மற்றும் கண்டன கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழக விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்டியிட்டும், பிச்சை எடுத்தும் கேட்டுக் கொண்டுள்ளோம்,’ என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
