நாகப்பட்டினம், ஜூன் 30: வேளாங்கண்ணி அருகே அனுமதியின்றி களிமண் எடுத்த 4 பேரை போலீசார் கைது செய்து, ஜேசிபி, டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். வேளாங்கண்ணி அருகே பாலக்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே அரசு அனுமதி இன்றி களிமண் எடுத்துச் செல்வதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு டிராக்டரில் அனுமதிஇன்றி களிமண் விற்பனைக்கு எடுத்தது தெரிய வந்தது.
அங்கு களிமண் ஏற்றி நின்ற ஒரு ஜேசிபி எந்திரம் மற்றும் தலா ஒரு யூனிட் வீதம் 3 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்து வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி களிமண் எடுத்ததாக வேளாங்கண்ணி அருகே கிள்ளுகுடி வடக்கு தெருவை சேர்ந்த பாலமுருகன் (47) ஜேசிபி ஓட்டுநர், பாலக்குறிச்சி ஜேஜே நகர் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் (49), அதேபகுதி தெற்குத் தெருவை சேர்ந்த குணசீலன் (30), வடக்குத் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (53 ) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
