கூரை வீடுகள் கான்கிரீட்டாக மாறியதால் மாற்றுத் தொழிலை தேடி செல்லும் பனங்கை தயாரிப்பு தொழிலாளர்கள்

 

திருமயம், ஜூன் 29: தொழில்நுட்ப வளர்ச்சியால் பனங்கைத் தேவை குறைந்ததால் பனங்கை தயாரிப்பு தொழில் செய்யும் தொழிலாளர்கள் வேலை இன்றி மாற்றுத் தொழிலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதன் ஒரு காலத்தில் இயற்கையோடு இணைந்து இயற்கையை நம்பி வாழ்ந்து வந்தான். அப்போது மனிதனுக்கு இயற்கையை பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் கட்டாயம் ஏற்பட்டது. இதனால் இயற்கை அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டதோடு பராமரிக்கப்பட்டது. இதன் காரணமாக மனிதர்கள் சுத்தமான காற்று, இயற்கையான சுற்றுச்சூழல், குறைவான நோய், நிறைவான சந்தோஷம் உள்ளிட்டவைகள் இருந்து வந்தது. காலப்போக்கில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் தேவைகள் அதிகமானதால் தொழில்நுட்பம் கொண்டு இயற்கைக்கு மாறாக புதிய புதிய பொருட்கள் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் இயற்கை மீறிய கண்டுபிடிப்புகள் இயற்கைக்கு மாறான பொருட்கள் தயாரிப்பால் இயற்கை சற்று ஆட்டம் காண தொடங்கியது. அதேசமயம் தொழில்நுட்பம் மூலம் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் செயற்கை பொருள்களால் வெளியேற்றப்படும் கழிவுகளால் இயற்கை தொடர்ந்து மாசடைந்து பாழடைந்து வருகிறது. இதனைப் போக்க பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தொழில்நுட்பங்களைத் தவிர மனிதன் வேறு எதையும் நம்ப தயாராக இல்லை. இதனால் மனிதன் இயற்கையை கைவிட்டதோடு பராமரிப்பிலும் மெத்தனம் காட்ட தொடங்கியது வேதனை அளிக்கிறது.

அப்படியான ஒன்றுதான் அழிவின் விளிம்பில் உள்ள பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பனங்கை என்னும் மரக்கட்டை ஆகும். இதனை முன்னோர்கள் வீடு கட்டவும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை ஓலையை கூரைகள் வேயவும் பயன்படுத்தி வந்தனர். இதனால் அப்போது பனை மரத்திற்கு தனி மவுசு இருந்து வந்தது. அதேசமயம் பனை மரத்திலிருந்து நுங்கு, பதநீர் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் பெறப்பட்டதால் பனை மரத்தை அப்போது இருந்த மனிதர்கள் கடவுளாக பார்த்தனர். இதனால் பனை மரங்களை அழிவிலிருந்து பாதுகாத்ததோடு புதிய மரங்களை நடவு செய்ய தொடங்கினர்.

இதனிடைய தற்போது பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பனங்கை எனப்படும் தூண் வடிவிலான நீண்ட கட்டைகளுக்குப் பதிலாக இரும்பு கம்பிகள், ஓலைக்கு பதிலாக கான்கிரீட், ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் உள்ளிட்டவைகளின் வரவு காரணமாக பனை மரத்தின் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் கோடை காலங்களில் நுங்குக்காக மட்டுமே தற்போது உள்ள ஒரு சிலர் பனைமரத்தை நாடுகின்றனர். பனை மரத்திலிருந்து என் பானம் தயாரிப்பதற்கும் அனுமதி பெறுவதில் சிக்கல்கள் உள்ளதால் பனை மரத்தின் பயன்பாடு முற்றிலும் குறைந்து போனது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி பகுதியில் பனங்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளிகளிடம் கேட்டபோது:

30 ஆண்டுகளுக்கு முன்னர் அரிமளம், திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு கூரை, ஓட்டு வீடுகள் கட்டப்பட்டது. அப்படியான வீடுகள் கட்டுவதற்கு பனங்கை இன்றியமையாததாக இருந்தது. இதனால் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பனங்கை தயாரிப்பு அதிக அளவில் இருந்தது. இது அப்பகுதியில் உள்ள பல்வேறு தரப்பினருக்கும் வேலை வாய்ப்பு அளித்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான மக்கள் ஓட்டு வீடு, கூரை வீடு கட்டுவதை முற்றிலும் தவிர்த்து விட்டனர். மேலும் அப்படியே ஓட்டு வீடு, கூரை வீடுகள் கட்டினாலும் பனங்கைக்கு பதிலாக இரும்பு கம்பிகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

இதனால் பனங்கை தயாரிப்பு குறைந்து வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. இந்த தொழிலை மட்டுமே நம்பி இருந்தவர்கள் பலர் வேலையை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது ஒரு பனங்கை தரத்திற்கு ஏற்ப ரூ. 100 லிருந்து 150 வரை விற்கப்படுகிறது. ஆனால் வாங்குவதற்கு ஆள் இல்லாமல் உள்ளது. அதே சமயம் தொடர் வறட்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் பனை மரங்களும் முற்றிலும் அழிந்து விட்டது. பனங்கை இரும்புக்கு நிகராக பார்க்கப்பட்ட நிலையில் பனங்கை தேவை குறைந்ததால் மக்கள் பனைமர வளர்ப்பிலும் ஆர்வம் காட்டவில்லை என்றார் வேதனையுடன்.

Related Stories: