- அஇஅதிமுக
- கூட்டிப்பட்டு,
- Mayilam
- சுயவிவரம்
- சண்முகம்
- பசுபதி
- சி.வி.சண்முகம்
- மாவட்ட செயலாளர்
- கூட்டேரிப்பட்டு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
மயிலம், ஜூன் 29: மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் நடந்த அதிமுக கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர் பசுபதிக்கு எதிராக சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் என இரு பிரிவாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் 4 அதிமுக எம்எல்ஏக்கள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். சி.விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதற்காக காத்து கிடக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சி.வி.சண்முகம் தவிர்த்து மீதம் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் எடப்பாடி தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சிவி சண்முகத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் சி.வி.சண்முகத்தை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பசுபதி என்பவரை மாவட்ட செயலாளராக நியமனம் செய்தார். இந்நிலையில் நேற்று மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பசுபதி தலைமையில் அதிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அங்கு வந்த சிவி சண்முகம் ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் திடீரென்று பசுபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் கோஷமிட்டவர்களை கலைந்து செல்ல கூறியதால் போலீசாருக்கும், சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கோஷமிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
