திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று விஐபி தரிசனம், ஸ்ரீவாணி டிக்கெட் ரத்து: 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று விஐபி தரிசனம் மற்றும் ஸ்ரீ வாணி டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக திருமலையில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை எதிர்பாராதவிதமாக அதிகரித்துள்ளது.

இதனால் இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் 85,582 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 44,155 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.76 கோடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு 4.66 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 3.43 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியிருந்தது. பக்தர்கள் பேட்ட கங்கம்மா கோயில் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

திருமலையில் பக்தர்கள் அதிகளவில் இருப்பதால் இரவில் அறைகள் கிடைக்காமல் வெட்ட வெளியிலும், கூடாரங்களிலும் தங்கி வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பால், குடிநீர், அன்னபிரசாதம் ஆகியவை ஸ்ரீவாரி சேவா பக்தர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இலவச தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை குறைக்கும் வகையில், திங்கட்கிழமையான இன்று விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நேற்று முக்கிய பிரமுகர்கள் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், ஆன்லைன் நடப்பு முன்பதிவில் அந்தந்த நாளில் வழங்கப்படும் 800 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பக்தர்கள் தங்களது தரிசன நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு வரும்படி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: