சென்னை: பால் முகவர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது: சென்னை, புறநகர் பகுதிகள் மற்றும் சில மாவட்டங்களில் முன்பு தினசரி கிடைத்த அளவிலான பால் பாக்கெட்டுகள் தற்போது வழங்கப்படவில்லை. பல பகுதிகளில் 30 சதவீதம் வரை பால் விநியோக அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கே முழுமையாக பால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அதிகாலை நேரங்களில் ஆவின் விற்பனை மையங்களில் பால் கிடைக்காமல் நுகர்வோர் திரும்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
தனியார் நிறுவனங்களிடம் பால் கொள்முதல் அதிகரிப்பதால் ஆவினுக்கு வரும் பால் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி ஆவின் பாலை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் சிறிய உணவகங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் ஒரே நபருக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
