×

சமூக நீதியின் தாய்மடியாக திகழும் தமிழ்நாட்டை சமூக அநீதிக்கான தளமாக மாற்றுவதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு திமுக ஐடி விங் கேள்வி

சென்னை: சமூக நீதியின் தாய்மடியாக திகழும் தமிழ்நாட்டை சமூக அநீதிக்கான தளமாக மாற்றுவதுதான் மாற்றமா என்று முதல்வர் விஜய்க்கு திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக ஐடி விங் நேற்று தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: சட்டமன்றத்தை ‘சத்த’மன்றமாக்கி, சமூக நீதி என்று ஹைடெசிபிளில் குரல் கொடுத்த முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில், பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் ஐ.டி. கார்டு வழங்கப்படும் என த.வெ.க அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

அதாவது, தமிழ்நாட்டில் இனி ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்கள் சாதி அடையாளத்தை கழுத்தில் தொங்க விட்டுக்கொள்ளப் போகும் அவலத்தை உருவாக்க நினைக்கிறது த.வெ.க. அரசு. காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்வித தடையுமின்றி, உரிய முறையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. அதனால்தான், இடஒதுக்கீடு அடிப்படையில் பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது.

அது, கல்வி வாய்ப்பைப் பெறுவதற்காகத்தானே தவிர, கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வதற்கான பெருமித அடையாளமல்ல. ஒரு மாணவர் எந்த பள்ளியில் படிக்கிறார், அவர் பெயர் என்ன, எந்த வகுப்பில் படிக்கிறார், அவருக்கான தொடர்பு எண் என்ன, அவசர தேவைக்காக அவருடைய ரத்தவகை என்ன என்பன போன்றவைதான் ஐ.டி.கார்டில் இருக்க வேண்டும்.

இந்த மாணவன் இன்ன சாதி, அந்த மாணவன் இன்ன சாதி என்று கழுத்தில் தொங்க விட்டுக் கொள்ளும் போக்கு, மாணவ சமுதாயத்திடம் பிரிவினையையும் மோதலையும்தான் உண்டாக்கும். சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான எந்த ஒரு அடையாளமும் சமூக நீதிக்கு எதிரானது. முதல்வர் விஜய் உத்தரவில் இதை செய்யப் போகிறோம் என்கிறார் அமைச்சர். இதற்கும் விஜய் வாய் திறக்க மாட்டார். சமூக நீதியின் தாய்மடியாக திகழும் தமிழ்நாட்டை சமூக அநீதிக்கான தளமாக மாற்றுவதுதான் மாற்றமா முதல்வரே? இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Dimuka ID Wing ,Principal ,Vijay ,Chennai ,Chief Minister ,
× RELATED சென்னையில் பிரபல ரவுடி செல்லா என்ற...