- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மத்திய குற்ற கிளை
- சென்னை
- மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
- எலங்கோவன்
- தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு
சென்னை: தமிழ்நாடு தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் சுமார் ரூ.100 கோடி வரை ஏமாற்றிய நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் பெடரேசன் ஆப் அசோசியேசன் ஆப் பிரைவேட் ஸ்கூல் இன் தமிழ்நாடு செயலாளர் இளங்கோவன் சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் திட்ட அனுமதி ஆகியவற்றைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் பி.டி.அரசகுமார் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளை பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாகக் கூறினார்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு, உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றிய பி.டி.அரசகுமார் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி, அறிவுறுத்தலின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு உதவி ஆணையர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியான சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனி, எம்.பி. அவென்யூவை சேர்ந்த அரசகுமார் (59) என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அரசகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
