மும்பை: பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தாவின் திரைப்பயணம் மற்றும் அவரது ரகசிய உறவுகள் குறித்த அதிர்ச்சி தகவல்களை அவரது முன்னாள் மேலாளர் வெளியிட்டுள்ளார். தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தாவின் முன்னாள் மேலாளராக இருந்த போலா ராம் மால்வியா என்பவர், கடந்த ஜனவரி 2025ம் ஆண்டு அளித்த பேட்டியில் நடிகையின் தொழில்முறை ஒழுக்கம் குறித்து பல்வேறு புகார்களைத் தெரிவித்துள்ளார். தனுஸ்ரீ தத்தா தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இயக்குநர் ஆதித்யா தத்தை காதலித்து வந்ததாகவும், ஒருமுறை அவுட்டோர் படப்பிடிப்பின் போது திடீரென ஆதித்யாவுடன் கோவா செல்ல வேண்டும் என்று அடம்பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதோடு, படப்பிடிப்பு அட்டவணையும் பாதிக்கப்பட்டு பல பிரச்னைகள் உருவானதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் போலா ராம் மால்வியா கூறுகையில், ‘தனுஸ்ரீ தத்தாவுக்காக நான் கடினமாக உழைத்து 2 முதல் 3 பெரிய பட வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தேன். ஆனால் அவர் ஆதித்யா தத்துடன் கோவா செல்ல 3 நாட்கள் விடுப்பு கேட்டார். அப்போது ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததால், நான் வேண்டாம் என்று தடுத்தேன்.
ஆனால் அவர் கேட்காததால், நானே தயாரிப்பாளரிடம் பேசி அவரை அனுப்பி வைத்தேன். இதன் காரணமாக கொல்கத்தாவில் புத்தாண்டு இரவு கலைநிகழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்களில் குளறுபடி ஏற்பட்டது. பின்னர் ஒரு வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு வந்த அவர், எங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தை மீறி புதிய மேலாளரை நியமித்துக் கொண்டார்’ என்று தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து தனுஸ்ரீ தத்தா தரப்பில் இருந்து எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
